India

கோழி கறிக்காக மனைவியை தாக்கிய கணவர்.. சண்டையை தீர்க்க வந்த பக்கத்து வீட்டுக்காரருக்கு நேர்ந்த சோகம் !

மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபால் அருகிலுள்ள சவானி பதார் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பப்பு அஹிர்வார். இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி எதாவது சண்டை ஏற்படும். சண்டை பெரிதானால் அக்கம் பக்கத்தினர் வந்து சண்டையை தீர்ப்பது வழக்கம்.

சம்பவத்தன்று இவர் தனது மனைவியிடம் கோழிக்கறி சமைத்து தருமாறு கூறியுள்ளார். ஆனால் அதற்கு இவரது மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பப்பு அஹிர்வார் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த பப்பு அஹிர்வார் தனது மனைவியை தாக்கி அவரை அடித்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த பப்லு என்பவர் இவர்களின் சண்டையை விலக்கி விட்டுள்ளார். தனது வீட்டு சண்டையில் பக்கத்து வீட்டுக்காரர் தலையிட்டதை கண்டு கடும் கோவம் கொண்ட பப்பு அஹிர்வார் கம்பை எடுத்து பப்லுவின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு தனியே இருந்த பப்லுவை கம்பால் பப்பு அஹிர்வார் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பப்லுவின் சத்தம் கேட்டு அங்கு வந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் பப்பு அஹிர்வாரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Also Read: "சிறுமியை வன்கொடுமை செய்தாலும் அவரை கொலை செய்யாத கருணை கொண்டவர்"- குற்றவாளிக்கு சலுகை காட்டிய நீதிமன்றம்!