India

பெற்ற மகளை நரபலி கொடுத்த பெற்றோர்.. பண பிரச்னைக்காக கேரளாவைத் தொடர்ந்து குஜராத்தில் அரங்கேறிய கொடூரம் !

குஜராத் மாநிலம் சோம்நாத் பகுதியை அடுத்துள்ள தாரா கிர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் 14 வயது சிறுமி. சூரத் நகரில் பள்ளியில் படித்து வந்த சிறுமியை, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது பெற்றோர் மதிய நேரத்தில் வீட்டிற்க்கு அழைத்து வந்துள்ளனர்.

இதையடுத்து சிறுமி பள்ளி செல்லவே இல்லை. பின்னர் பெற்றோர் ஒருவர் தங்களது மகளை கொன்று விட்டதாக காவல்துறைக்கு இரகசிய தகவல்கள் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பெற்றோரிடம் விசாரிக்கையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

இதையடுத்து அவர்களிடம் விசாரிக்கையில் அவர்களுக்கு பணக்கஷ்டம் இருந்ததால் தங்கள் மகளை நரபலி கொடுத்ததாக வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இதுபோன்று பண பிரச்னை இருந்தால், பெற்ற மகளை நரபலி கொடுத்தால் பணக்கஷ்டம் தீரும் என்ற நம்பிக்கையில் அவர்கள் சிறு மகள் என்றும் பாராமல் பலி கொடுத்ததாக காவல்துறை கூறினர்.

முன்னதாக கேரள மாநிலம் கொச்சி, பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த பகவந்த் சிங் - லைலா தம்பதியினர், முஹம்மது ஷாஃபி என்ற போலி மந்திரவாதியை பணக்கஷ்டம் என்று அணுகியுள்ளனர். அந்த போலி சாமியாரோ தெரியாத பெண்ணை நரபலி கொடுக்கவேண்டும் என்றும், அதற்கான பெண்ணை தானே அழைத்து வருகிறேன் என்று கூறி, அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்று வந்த பெண்ணை ஏமாற்றி அழைத்து வந்து நரபலி கொடுத்துள்ளனர்.

நரபலி வழக்கில் கைதான தம்பதியினர் லைலா - பகவல் சிங்

ஆனால் அந்த பலி பூஜை பலனை கொடுக்கவில்லை என்று தமிழகத்தை சேர்ந்த வேறொரு பெண்ணை ஏமாற்றி அழைத்து சென்று அவரையும் நரபலி கொடுத்தனர். பின்னர் அவர்கள் உடலை துண்டுதுண்டாக வெட்டி சமைத்து அந்த தம்பதியினர் சாப்பிட்டு விட்டனர்.

இந்த சம்பவம் தற்போது வெளியாகி நாட்டையே உலுக்கிய நிலையில், பெற்ற மகளை பண பிரச்னை காரணமாக பெற்றோர்களே நரபலி கொடுத்துள்ள சம்பவம் குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 2 பெண்கள் நரபலி.. பிணத்தை சாப்பிட்ட தம்பதி.. பணக்காரராக வேண்டும் என்ற எண்ணத்தில் அரங்கேறிய கொடூரம் !