India

ரூ.25 கோடி பரிசு கிடைத்தும் மனவருத்தத்தில் கேரள நபர்.. சொந்த வீட்டில் கூட நிம்மதி இல்லை என புலம்பல் !

கேரளாவில் அரசு அனுமதியோடு லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு, ஓணம் பண்டிகையை ஒட்டி லாட்டரி விற்பனை நடைபெற்றது. இதில், கேரளத்தைச் சோந்த ஆட்டோ ஓட்டுநருக்கு, ரூ.25 கோடி பரிசு தொகை கிடைத்தது.

அப்போது பேசிய அவர், இந்தப் பணத்தை வைத்து முதலில் வீடு கட்டுவேன். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவேன். எனது உறவினா்களுக்கு உதவுவேன். அறப்பணிகளைச் செய்வேன் என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து வரிப்பிடித்தம் போக அவருக்கு ரூ.15 கோடி பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.

இந்த நிலையில், தற்போது நான் ஒட்டுமொத்த நிம்மதியையும் இழந்துவிட்டேன். எனது சொந்த வீட்டில் கூட என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என அந்த நபர் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், நான் பம்பர் லாட்டரில் பெற்ற பரிசுத் தொகையிலிருந்து சிறிது தொகையைக் கொடுத்து தனக்கு உதவுமாறு நாள்தோறும் எண்ணற்றவர்கள் என் வீட்டுக்கு வந்து செல்கிறார்கள்.

நான் இப்போது எங்கு வசித்து வந்தேனோ, அந்த இடத்தை மாற்றிவிட்டேன். ஆனாலும் என் இடத்தை கண்டுபிடித்து வந்து விடுகிறார்கள். இதனால் நான் மன நிம்மதியையும் இழந்துவிட்டேன், பரிசுத் தொகை வருவதற்கு முன்பு வரை நான் மகிழ்ச்சியாக இருந்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும், நான் இருக்கும் வீட்டை விட்டு வெளியே கூட போக முடியவில்லை. என்னை பார்க்கும் யார் ஒருவரும் ஓடி வந்து உதவி கேட்கிறார்கள். தனக்கு இன்னும் பணம் வந்துசேரவில்லை என்பதை கூறியும் நம்ப மறுக்கிறார்கள். என் வீட்டைச் சுற்றிலும் அதிகக் கூட்டம் இருப்பதால், அண்டை வீட்டார் எல்லாம் என் மீது கோபத்தில் இருக்கிறார்கள் என்று மனவருத்தத்தோடு கூறியுள்ளார்.

Also Read: ரஷ்யா - உக்ரைன் போர்.. வடகொரியாவை தூண்டிவிட்ட அமெரிக்கா.. காட்டமான பதிலடி கொடுத்த வடகொரியா !