India

சரியாகப் படிக்காத தம்பி.. அடித்தே கொன்ற அண்ணன்: ஒடிசாவில் கொடூரம்!

ஒடிசா மாநிலம், பாரமுண்டா பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்மோகன் சேனாபதி. இளைஞரான இவர் கல்லூரியில் பி.எட். இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தார். அவரது சகோதரர் பிஸ்வா மோகன். இவர் எம்.பி. ஏ முதுகலை பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

இந்நிலையில் தம்பி ராஜ்மோகன் சரியாக படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால் பிஸ்வா மோகன் அவரை நன்றாகப் படிக்கும்படி வலியுறுத்தி வந்துள்ளார்.

இதன் காரணமாகச் சகோதரர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் தம்பியைப் படிக்கும்படி பிஸ்வா கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆவேசமடைந்த பிஸ்வா மோகன் தம்பி என்றும் பாராமல் ராஜ்மோகனை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் ராஜ்மோகன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து மயங்கியுள்ளார்.

பின்னர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதனை செய்தபோது மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரியாகப் படிக்காத தம்பியைச் சொந்த அண்ணனே அடித்து கொலை செய்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்கள்.. தர்ம அடி கொடுத்த மக்கள்: விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!