India

இறுதிவரை பயணிகளுக்காக நின்ற ஓட்டுநர் மற்றும் நடத்துநர்.. Smart Phones-யை பரிசாக வழங்கிய KSRTC நிர்வாகம்!

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் இரண்டு தினங்களாக இரவு நேரங்களில் அதிக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பெங்களூர் மாநகரமே வெள்ளக்காடாகக் காட்சியளிப்பதுடன் சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் புகுந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் உரகஹள்ளியில் இருந்து ராமநகர் நோக்கிச் சென்ற அரசு பேருந்து ஒன்று சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் பயணிகள் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டுள்ளனர்.

பின்னர் பேருந்து ஓட்டுநர் லிங்கராஜ், நடத்துநர் வெங்கடேஷ் ஆகிய இருவரும் வெள்ளத்திலிருந்து வெளியே வந்து உதவிக்காகக் கிராம மக்களை அழைத்து வந்துள்ளனர். பிறகு கிராம மக்கள் உதவியுடன் அனைத்து பயணிகளையும் வெள்ளத்திலிருந்து பத்திரமாக மீட்டுள்ளனர்.

இதையடுத்து தங்களின் உயிரைப் பணயம் வைத்து பயணிகளைக் காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரையும் பாராட்டி KSRTC நிர்வாக இயக்குநர் ஸ்மார்ட் போனை பரிசாக வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், துணிச்சலுடன் செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர், நடத்துநருக்கு பொது மக்களும் பாராட்டு தெரிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Also Read: தொடர் கனமழையால் நிகழ்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி துடிதுடித்து இளம்பெண் பலி.. கர்நாடகாவில் சோகம் !