India

ரூ.6000-க்கு விற்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை.. பிறந்தவுடனே இறந்ததாக நாடகமாடிய தந்தை கைது !

அசாம் மாநிலம் பிஸ்வநாத் பகுதியை அடுத்துள்ள கோக்பூர் பகுதியிலுள்ள மருத்துவமனையில் ஒரு தம்பதியினருக்கு கடந்த 11-ம் தேதி பெண் ஒன்று பிறந்தது. ஆனால் பிறந்த சில மணி நேரங்களிலே அந்த பெண் குழந்தை இறந்ததாக தனது தந்தையிடம் (குழந்தையின் தாத்தா) அழுதுகொண்டே கூறினார் அந்த நபர் (குழந்தையின் தந்தை).

இதையடுத்து தனது மகன் மேல் சந்தேகம் கொண்ட முதியவர், கோக்பூர் காவல்துறையில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், "தனது மருமகள் கோக்பூரிலுள்ள மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது கடந்த 11ஆம் தேதி அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. பிறகு தனது மகன் தன்னிடம் வந்து அந்த பெண் குழந்தை இறந்ததாக கூறினான். இருப்பினும் அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனவே எனது மகன் - மருமகளை விசாரியுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது பெண் குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலே அதன் தந்தையே விற்றுவிட்டார். உத்தரபிரதேசம் லக்கிம்பூர் பகுதியை சேர்ந்த உபாத்யாய் என்ற நபரிடம் வெறும் 6000 ரூபாய்க்கு விற்று விட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து குழந்தையின் தந்தை, குழந்தையை வாங்கிய நபர் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் தங்கள் குற்றத்தை அனைவரும் ஒப்புக்கொண்டனர். மேலும் அந்த பெண் குழந்தையை மீட்ட காவல் அதிகாரிகள் அதனை குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர். பிறந்த சில மணி நேரங்களிலே பெண் குழந்தை 6000 ரூபாய்க்கு தந்தையே விற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "வங்கிகளை தனியார்மயமாக்கினால் இது தான் கதி.." - மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுத்த ரிசர்வ் வங்கி !