India

திருமணமான 3 மாதங்களில் மாயமான கேரள இராணுவ அதிகாரி.. ம.பி-யில் கண்டெடுக்கப்பட்ட சடலம் !- பின்னணி என்ன ?

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் நிர்மல் சிவராஜன் (வயது 32). இராணுவ அதிகாரியான இவர் கடந்த சில மாதங்களாக மத்திய பிரதேசத்திலுள்ள பச்மாரி பகுதியில் பயிற்சி மேற்கொண்டு வந்திருந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கேரளாவில் இவருக்கு திருமணம் நடைபெற்றது. பிறகு மீண்டும் பணிக்கு திரும்பிய இவர், அண்மையில் தனது புது மனைவியை காண கேரளாவுக்கு சென்றிருந்தார்.

பின்னர் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி இவர் மீண்டும் பணிக்கு திரும்பி கொண்டிருந்த நேரத்தில்திடீரென மாயமானார். இதையடுத்து அனைவரும் அவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அந்த பகுதியில் தீவிரமாக மழை பெய்து வரும் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டாரோ என்று அனைவரும் எண்ணினர்.

இதையடுத்து மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் ஆறு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சல்லடை போட்டு தேடினர். சுமார் 3 நாட்களாக பேரிடர் மீட்புக் குழுவினர் இராணுவ அதிகாரியை தேடி வந்த நிலையில், அங்குள்ள ஒரு மலையடிவாரத்தில் அவரது சடலம் ஒதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மற்ற இராணுவ அதிகாரிகள் கூறுகையில், "இந்த பகுதியில் தற்போது மிகக் கனமழை பெய்து வருவதால், ஆற்றில் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. துரஷ்டவசமாக இந்த வெள்ளத்தில் சிக்கிய அதிகாரி சிவராஜன் அடித்து செல்லப்பட்டிருக்கிறார்.

இவருக்கு திருமணமாகி வெறும் 3 மாதங்கள் இருக்கும் நிலையில் தனது மனைவியை பார்க்க கேரளாவுக்கு சென்றிருந்தார். பிறகு மீண்டும் பணிக்கு திரும்பியபோது இந்த சோகம் ஏற்பட்டுள்ளது. இராணுவ அதிகாரி சிவராஜின் காரானது அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டது." என்றனர்.

திருமணமாகி வெறும் மூன்றே மாதங்களில் இராணுவ அதிகாரி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ‘முஸ்லிம் என்பதை காரணம் காட்டி வீடு கொடுக்க மறுக்கிறார்கள்’ : ஆதாரத்தோடு கண்ணீர் மல்க பேசிய கர்நாடக பெண்!