India

‘என்னடா சோறு போடுறீங்க?’ : ஹோட்டல் மேனேஜரை தாக்கிய ஏக்நாத் ஷிண்டே ஆதரவு MLA - வைரலாகும் வீடியோ !

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அம்மாநில ஹிங்கோலி மாவட்டத்தில் நேற்று அந்த பகுதி எம்.எல்.ஏ., சந்தோஷ் பங்கர் என்பவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மதிய உணவு சரியில்லை என்று அப்பகுதி தொழிலாளர்கள் அவரிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து உணவு வழங்கும் இடத்திற்கு எம்.எல்.ஏ., நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது வழங்கப்படும் உணவை கண்ட எம்.எல்.ஏ., அந்த உணவில் பூச்சிகள் இருப்பதையும் கண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், அந்த உணவகத்தின் மேலாளரை சட்டென்று கன்னத்தில் அறைந்துள்ளார்.

இது தொடர்பான காணொளி கடந்த திங்கட்கிழமை (நேற்றைய முன்தினம்) இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், தனது செயலுக்கு எம்.எல்.ஏ., விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, "இரவு பகலாக உழைக்கும் ஏழை மக்களுக்கு நல்ல சாப்பாடு வழங்க வேண்டும் என்பதற்காக எங்கள் அரசு உழைத்து வருகிறது. ஆனால், அதிலும் சிலர் ஊழல் செய்து வருகின்றனர். தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சாப்பாடு மோசமான அரசி, பருப்பை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் எந்த விதமான ஊட்டச்சத்து பொருட்களும் இல்லை.

உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்த போது அடக்குவதில் தான் குறியாக இருந்தனர். தற்போது ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ளார். இதனால், எங்களது குரல்கள் எழ துவங்கி உள்ளது. நாங்கள் பால்தாக்கரே தொண்டர்கள். அநீதி எழுந்தால், எங்களது குரலை எழுப்புவோம்." என்று தெரிவித்தார்.

Also Read: பள்ளி சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. தந்தையின் நண்பர்களே செய்த அவலம் ! - கேரளாவில் கொடூரம் !