India

திருட்டு ஆட்டோவில் நீதிபதி கொலை.. காத்திருந்து பழி வாங்கிய நபர்.. ஜார்கண்டை உலுக்கிய பயங்கரம் !

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் என்ற பகுதியில் சிறப்பு நீதிமன்றம் ஒன்று உள்ளது. இங்கு கூடுதல் மாவட்ட நீதிபதியாக இருந்தவர் தான் உத்தம் ஆனந்த். கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்கம்போல் காலையில் நடைப்பயிற்சிக்கு சென்று கொண்டிருக்கும்போது இவர் மீது ஆட்டோ ஒன்று மோதி விபத்தானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நீதிபதி உயிரிழந்தார்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கையில், முதலில் இது விபத்து போன்று தெரிந்தாலும் பிறகு சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த காவல்துறையினருக்கு இது வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்தது. எனவே இது தொடர்பாக காவல்துறையினர் 2 பேரை கைது செய்து விசாரித்தனர்.

மேலும் இது நீதிபதி கொலை என்பதால், இந்த வழக்கு CBI-க்கு மாற்றப்பட்டது. அப்போது அவர்கள் விசாரணையில், நீதிபதி மீது மோதிய ஆட்டோ, திருட்டு ஆட்டோ என்று தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ராகுல் குமார் வர்மா என்பவர் மீது கடந்த ஆண்டே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மற்றொரு குற்றவாளி லகான் வர்மா நீதிபதி உத்தம் ஆனந்தை கொலை செய்வதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, கைது செய்யப்பட்ட இருவரையும் IPC 302, 201 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளார். மேலும் குற்றவாளிகளுக்கு வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி தண்டனை அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

நீதிபதி கொலை வழக்கில் 1 ஆண்டுக்கு பிறகு குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவுள்ளது அந்த பகுதியில் பேசு பொருளாக மாறியுள்ளது.

Also Read: "என்னது பெட்ரோல் போடலையா.." சரி அபராதம் கட்டு.. - கேரளாவில் டிராபிக் போலிஸ் !