India

கடனை திரும்ப கேட்டதால் ஆத்திரம்.. இளைஞரை சரமாரியாக வெட்டிய அய்யப்பனும் கோஷியும் திரைப்பட நடிகர் !

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது பட்டியலில் மலையாள திரைப்படமான அய்யப்பனும் கோஷியும் 4 தேசிய விருதுகளை வென்றது. இந்த திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் வினீத் தட்டில் டேவிட்.

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் உள்ள புத்தன்பீடிகா பகுதியில் வசித்து வரும் இவர் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் ஆலப்புழாவை சேர்ந்த அலெக்ஸ்சிடம் ரூ. 6 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதில் ரூ.3 லட்சத்தை திருப்பி கொடுத்துள்ள வினீத் தட்டில், மீதம் உள்ள ரூ.3 லட்சத்தை திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். இது குறித்து அலெக்ஸ் பலமுறை வினீத் தட்டிலிடம் கேட்டுள்ளார்.

இதற்கு வினீத் தட்டில் எந்த பதிலும் சொல்லாத நிலையில், அலெக்ஸ் வினீத் தட்டிலை நேரில் சந்தித்து கடனை திருப்ப கொடுக்குமாறு கூறியுள்ளார். இது விவாதமாக முற்றியுள்ளது. இதில் கடும் ஆத்திரமடைந்த வினீத் தட்டில் அங்கு இருந்த கத்தியை எடுத்து அலெக்ஸை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த அலெக்ஸை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து வினீத் தட்டில் மீது வழக்கு பதிவுசெய்த போலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

அலெக்ஸ் குணமடைந்த பின்னர் அவரிடம் வாக்குமூலம் பெறப்படும் என்று போலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பிரபல மலையாள நடிகர் கைது செய்யப்பட்டுள்ளது கேரளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "காந்தி கால இந்தியா இப்போது இல்லை, மதவாதம் பெருகி நாட்டை அழிக்கிறது" -நெல்சன் மண்டேலா பேத்தி வருத்தம் !