India

“நீங்கல்லாம் ஸ்கூலுக்கு போக கூடாது” - பட்டியலின மாணவியை தாக்கிய கும்பல்: ம.பி-யில் நடந்த அராஜகம்! (Video)

மத்திய பிரதேச மாநிலம் ஷஜபூர் பகுதியை அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்தவர் நீது (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பட்டியலினத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுமியான இவர், அவர் கிராமத்திற்கு அருகே இருக்கும் மற்றொரு கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இவர் பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருக்கையில், அண்டை கிராமத்தை சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த ஒரு கும்பல் இவரை வழி மறுத்துள்ளது.

மேலும் அவரிடம் 'உங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் படிக்க கூடாது' என்று மிரட்டியுள்ளனர். அதோடு அந்த சிறுமியின் புத்தக பையை பிடிங்கி, உனது கிராமத்தில் இருக்கும் மற்ற சிறுமிகள் போல், நீயும் பள்ளி செல்லக்கூடாது என்று கறாராக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பயந்துகொண்டே வீட்டிற்கு சென்ற மாணவி, சம்பவத்தை பற்றி தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு கோபமடைந்த மாணவியின் சகோதரன், சம்பவம் குறித்து அந்த கும்பலிடம் சென்று தட்டிக்கேட்டுள்ளார். அப்போது மாற்று சமுகத்தை சேர்ந்த அந்த கும்பல், எங்களையே எதிர்த்து பேசுகிறாயா என்று கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் அவரது குடும்பத்தாரையும் தாக்கியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அந்த மாணவி இந்த சம்பவம் குறித்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ வெளியாகி வைரலானதை அடுத்து, காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுத்தனர். அதாவது அந்த மாணவியை மிரட்டி, அவரது குடும்பத்தாரை தாக்கிய 7 பேர் கொண்ட கும்பல் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பாம்பு கடித்து இறந்த சிறுமி வழக்கில் திடீர் திருப்பம் : வெளியான பகீர் வீடியோ - முதியவர் போக்சோவில் கைது !