India

புதுவையில் ஆளும் NR காங்.ஐ துளியும் மதிக்காத பாஜக: முதல்வருக்கே மரியாதை இல்லாததால் தொண்டர்கள் கோபம் !

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஜோதி ஓட்டம் இந்தியா முழுக்க நடைபெற்றது. அந்த ஜோதி அந்தந்த மாநிலங்களில் வரும்போது அதை வரவேற்க விழா எடுப்பது வழக்கம்.

அதன்படி ஒலிம்பியாட் செஸ் ஜோதி புதுச்சேரி வந்தது. அதனை வரவேற்கும் நிகழ்ச்சி உப்பளம் விளையாட்டரங்கில் நடந்தது. இவ்விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட பேனரில், இடது மேல் புறத்தில் பிரதமர் மோடி படமும், வலது மேல் புறத்தில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புகைப்படமும், ஒன்றிய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் படம் இடம் பெற்றிருந்தது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்துவரும் நிலையில், அங்கு முதல்வராக இருக்கும் ரங்கசாமி படம் விழா மேடையில் புறக்கணிக்கப்பட்டது மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் ஆளுநர், முதல்வர் மோதல் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வந்த நிலையில், அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல்வர் புகைப்படம் அரசு நிகழ்ச்சியில் இல்லாதது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை அவமானப்படுத்துவதாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல ஒலிம்பியாட் செஸ் ஜோதியை வரவேற்கும் விதமான பிற மாநிலங்களில் நடைபெற்ற அரசு விழாக்களில் அம்மாநில முதலமைச்சரின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து 'முதல்வர் புகைப்படம் இல்லாத புதுச்சேரி அரசு நிகழ்ச்சி' என்ற தலைப்பிலான போட்டோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சீனாவின் சக்திமான்.. ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை CATCH பிடித்த நபர்.. வைரல் வீடியோ!