India

நடிகையுடன் காரில் சென்று கொண்டிருந்த நடிகர்.. வழிமறித்து இருவரையும் சரமாரியாக அடித்த மனைவி ! - நடந்தது ?

ஓடியா, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் பிரக்ருதி மிஸ்ரா. இவர் சக நடிகரான பாபுஷான் மொஹந்தி என்பவருடன் சேர்ந்து 'ப்ரேமம்' என்ற ஒடிசா படத்தில் நடித்திருந்தார். இருவரும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், நேற்று விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்னைக்கு வருவதற்காக இருவரும் புபனேஷ்வர் விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பாபூஷானின் மனைவியான திருப்தி மொஹந்தி, வேகமாக வந்து அவர்கள் சென்று கொண்டிருந்த காரை மடக்கி சண்டையிட தொடங்கியுள்ளார். மேலும் காரிலிருந்த நடிகை மிஸ்ராவின் தலைமுடியை பிடித்து வெளியே இழுத்து சரமாரியாக அடித்தார். இதனால், அங்கிருந்து தப்பியோடி ஆட்டோ ஒன்றை பிடித்து சென்றுவிட்டார் மிஸ்ரா.

பட்டப்பகலில் வெட்டவெளியில் நடந்த இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்கள் மொபைல் போனில் பதிவு செய்தனர். அதிலும் ஒருவர், தனது மொபைல் போனில் போதிய இடம் இல்லை என்பதால் மற்ற வீடியோக்களை டெலீட் செய்து, இதனை வீடியோ எடுத்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மிஸ்ராவின் குடும்பத்தார் காவல்நிலையத்தில் திருப்தி மொஹந்தி மீது புகார் கொடுத்தனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது குறித்து பாபுஷானின் மனைவி திருப்தி மொஹந்தி கூறும்போது, தனது கணவருக்கும், நடிகை மிஸ்ராவுக்கு இடையே தகாத உறவு இருப்பதாக தெரிவித்தார்.

அதோடு இந்த சம்பவம் குறித்து நடிகர் மொஹந்தி கூறுகையில், ``நானும் நடிகை மிஸ்ராவும் விமான நிலையத்திற்கு சென்ற போது வழியில் என் மனைவியும், அவர் தந்தையும் காரை மடக்கி எங்களை அடித்தனர். நடிகை மிஸ்ரா எனக்கு சிறு வயதிலிருந்தே நல்ல தோழி.

ஆனால் என் மனைவிக்கு திரைப்படத்துறையில் நம்பிக்கை இல்லை" என்று தெரிவித்தார். மேலும் இந்த சம்பவத்தை அடுத்து, இனி மிஸ்ராவுடன் நடிக்க மாட்டேன் என்று கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

Also Read: ஆட்டுக்குட்டிக்காக நாய்களிடம் சண்டையிட்டு உயிர்நீத்த சேவல்: நினைவேந்தல் செய்த ஊர்மக்கள் : உ.பி நெகிழ்ச்சி