India

ஒரு தலைக்காதலால் கல்லூரி மாணவி படுகொலை.. புதுச்சேரியில் நடந்த கொடூரம் - போலிஸ் தீவிர விசாரணை!

புதுச்சேரியை அடுத்த சன்னியாசிக்குப்பம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (49). அவரது மகள் கீர்த்தனா (18) கலிதீர்த்தால்குப்பம் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இதனிடையே கல்லூரி மாணவி கீர்த்தனாவை அவரது உறவினரான அதபகுதியை சார்ந்த முகேஷ் (22) என்பவர் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. மேலும் காதலுக்கு மாணவி கீர்த்தனா மறுப்பு தெரிவித்ததால், அடிக்கடி கீர்த்தனாவிடம் தகராறு செய்த வந்ததாகவும், தன்னை தவிர்த்து வேறு யாரிடமும் பேசக்கூடாது என மிரட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கீர்த்தனா இன்று மாலை கல்லூரி முடித்த பின்னர் தனியார் பேருந்தில் இருந்து சன்னியாசிக்குப்பம் கடைவீதியில் இறங்கி வீட்டிற்கு செல்ல முற்பட்டபோது, கத்தியுடன் மறைந்திருந்த முகேஷ் கீர்த்தனாவின் கழுத்து மற்றும் கை, கால்களில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றான்.

இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் கீர்த்தனா சரிந்து கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கீர்த்தனாவை மீட்டு மதகடிப்பட்டு உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்ததில் மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருபுவனை போலிஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய முகேஷை வலை வீசி தேடி வருகின்றனர்.

கொலை செய்து தப்பியோடிய முகேஷ் மீது மதுபான கடையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: “ஆன்லைனில் வேலை தேடுபவர்களை குறிவைத்து பண மோசடி..” : வடமாநில இளைஞரை தட்டித் தூக்கிய தமிழ்நாடு போலிஸ் !