India

"கேள்வி கேட்டால் பிரதமர் தப்பி ஓடுவது நாகரீக செயல் அல்ல" -மோடியை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி!

மோடி அரசாங்கம் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபிறகு, கொரோனா பாதிப்பு, வேலை இழப்பு, பொருளாதார சரிவு, சமூக செயல்பாட்டாளர் கைது, பெட்ரோல் - டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு போன்ற அடுத்ததடுத்த மக்களை பாதிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.

ஆனால் இதுகுறித்து எந்தவித கவலையோ வருத்தமோ கொள்ளாத ஒன்றிய அரசுக்கு எதிராக நாடுமுழுவது பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறும் வேளையில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் மக்கள் பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 18ம் தேதி தொடங்கிய நிலையில் அதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டது.

அதில், “துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுக்கேட்பு கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், அழிவு சக்தி, காலிஸ்தானி, முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள்”ஆகிய வார்த்தைகளும் பயன்படுத்தக் கூடாது என அறிவித்துள்ளது. ஒன்றிய பா.ஜ.க அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நாடாளுமன்றம் கூடியதும் இரு அவைகளிலும் G.S.T விலை உயர்வு, பண வீக்கம் அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற விவகாரங்களை மையப்படுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் நேற்றும் இன்றும் இரு அவைகளும் முற்றிலும் முடங்கியது.

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், " ரூபாய் மதிப்பு 80ஐ எட்டுகிறது,கேஸ் விலை அதிகரிக்கிறது, ஜூன் மாதத்தில் 1.3 கோடி பேர் வேலையில்லாமல் உள்ளனர், உணவு தானியங்களுக்கும் ஜி.எஸ்.டி சுமை, பொதுமக்கள் பிரச்னைகளை எழுப்புவதை யாராலும் தடுக்க முடியாது. அதற்கு அரசு பதில் சொல்ல வேண்டும்.பார்லிமென்டில் விவாதங்கள் மற்றும் கேள்விகளில் இருந்து பிரதமர் தப்பி ஓடுவது மிகவும் 'அன் பார்லிமென்ட்." என விமர்சித்துள்ளார்.

Also Read: நுபுர் சர்மா வீடீயோவை பார்த்ததால் ஆத்திரம்.. இளைஞரை கத்தியால் குத்திய கும்பல்.. பீகாரில் அதிர்ச்சி!