India

வங்கி ஊழியர்கள் குறித்து அவதூறு! குருமூர்த்தி மேல் நடவடிக்கை? -ஒன்றிய அமைச்சரின் கடிதத்தால் பரபரப்பு!

கடந்த மே 8ஆம் தேதி துக்ளக் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில்உரையாற்றிய துக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, பிரதமர் மோடி, ஒன்றிய அரசு மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரை பாராட்டி பேசினார்.

அதைத் தொடர்ந்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சித்த அவர் அரசு ஊழியர்களையும் விமர்சித்தார். தொடர்ந்து தேசிய அரசாங்க வங்கிகளில் பணியாற்றுகிறவர்கள் கழிசடைகள் என அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவரின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரின் இந்த பேச்சை நிர்மலா சீதாராமன் கண்டிக்காதது ஏன் என பலரும் கேள்வி எழுப்பினர்.

அதைத் தொடர்ந்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன், குருமூர்த்தியின் கழிசடை கூற்றை கண்டியுங்கள் நிதியமைச்சரே என்ற தலைப்பில் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

இந்த நிலையில் இந்த கடிதத்துக்கு ஒன்றிய நிதி இணையமைச்சர் டாக்டர் பகவத் கரத் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக சு.வெங்கடேசனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "இப்பிரச்சினை தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வரம்பெல்லைக்குள் உட்பட்டதாக இருப்பதால் பொருத்தமான மேல் நடவடிக்கைக்கு அந்த அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது."எனக் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வை சு.வெங்கடேசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் "பொருத்தமான மேல் நடவடிக்கை வருகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்" எனக் கூறியுள்ளார்.

Also Read: YOUTUBE பார்த்து செய்யப்பட்ட துப்பாக்கியால் கொல்லப்பட்டாரா ஷின்சோ அபே? கொலைக்கான காரணம் என்ன?