India

3 வருடமா ஒரு மாணவர் கூட வரவில்லை.. விரக்தியில் சம்பளதொகை 24 லட்சத்தை திரும்ப கொடுத்த பேராசிரியர்!

பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக் கழக்கத்தின் கீழ் இயங்கும் நிதிஷ்வர் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு லாலன் குமார் என்பவர் ஹிந்தி ஆசிரியராக கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பரில் பணியில் சேர்ந்துள்ளார்.

ஆனால் இவர் பணியில் சேர்ந்ததில் இருந்து கொரோனா பாதிப்பு போன்ற காரணத்தால் கல்லூரிக்கு எந்த மாணவரும் வரவில்லை. இதனால் இவர் கடும் அதிருப்தியில் இருந்துள்ளார். இதனால் பல முறை பணியிட மாற்றத்துக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால் இன்று வரையில் அது மறுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாணவர்களுக்கு தான் பாடம் எடுக்காமல் சம்பளம் பெறுவது குறித்து வேதனை அடைந்த இவர், தான் வாங்கிய சம்பளத்தினை திரும்ப செலுத்த முடிவு எடுத்துள்ளார்.

இது குறித்து பல்கலைக் கழக துணைவேந்தருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ள அவர், பாடம் எடுக்காமல் சம்பளம் வாங்க எனது மனசாட்சி எனக்கு இடம் கொடுக்கவில்லை என்றும், அதோடு ஒரு செக் லீப்பினையும் சேர்த்து 24 லட்சம் சம்பள தொகையை அனுப்பியுள்ளார்.

மேலும் தனது கடிதத்தில் "இங்கு பணியமர்த்தப்பட்ட நிலையில் மாணவர்கள் யாரும் வரவில்லை. பல முறை இதுகுறித்து இடமாற்றம் கேட்டு விட்டேன்.எனது கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏற்றுக் கொள்ளாவிட்டால் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்குவேன் " என்றும் கூறியுள்ளார்.

லாலன் குமார் புகழ்பெற்ற டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்று டெல்லி பல்கலைக் கழகத்தில் எம்.பில் பட்டம் முடித்துள்ளார் . இந்த நிலையில் இவரது இந்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பத்ம விபூஷன் விருது பெற்ற முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி வீடியோ வெளியீடு!