India

மோட்டார் பம்புகளுக்கு 18% GST.. இன்னும் என்னென்ன பொருட்களுக்கு GST வரி உயர்த்தப்பட்டுள்ளது?

47-வது GST கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டீகரில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேச பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து இந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் LED விளக்குகள், பேனா மை, கத்தி, பிளேடுகளுக்கு 12%ல் இருந்து 18% ஆக ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் மோட்டார் பம்புகள், பால் பண்ணை இயந்திரங்களுக்கான ஜி.எஸ்.டி வரி 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் அரிசி ஆலை இயந்திரங்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5%ல் இருந்து ஒரேடியாக 18%ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சூரிய சக்தி வாட்டர் ஹீட்டர், பதப்படுத்தப்பட்ட தோல்களுக்கான ஜி.எஸ்.டி வரி 12% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.1000-க்கும் குறைவான விடுதி அறை வாடகைக்கு 12% ஆக ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அஞ்சலக சேவைகளுக்கான வழங்கப்பட்டு வந்த ஜி.எஸ்.டி வரி விலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அஞ்சல் சேவைகளுக்கான ஜி.எஸ்.டி வரி இனி வசூலிக்கப்பட உள்ளது.

விவசாய பயன்பாட்டிற்கான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆன்லைன் விளையாட்டுகள் மீதான 28% GST வரி உயர்த்துவது தொடர்பான முடிவை ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரி உயர்வு ஜூலை மாதம் 18 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும், மதுரையில் அடுத்த GST கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் முதல்வாரத்தில் நடைபெறும் எனவும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Also Read: குடியரசு துணைத் தலைவர் தேர்தல்.. தேதியை வெளியிட்ட தேர்தல் ஆணையம்: முழு விபரம் இதோ!