India

சொந்த கிராமத்திற்கு மின்சாரம் கொடுக்காதவர் பழங்குடியினருக்கு என்ன செய்வார்? சந்திரசேகர ராவ் விமர்சனம்!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதனையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டார்.

பாஜக அறிவித்துள்ள வேட்பாளரான திரௌபதி முர்மு 2 முறை எம்.எல்.ஏவாகவும், 1 முறை அமைச்சராகவும் இருந்துள்ளார். மேலும் ஜார்க்காண்டு மாநிலத்தின் ஆளுநராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் இவரின் சொந்த கிராமத்தில் இன்னும் மின்சார வசதி கூட வரவில்லை என தகவல் வெளியானது.

அரசியலில் இத்தனை பதவிகளை வகித்த திரௌபதி முர்மு அவர்களால் சொந்த கிராமத்துக்கு மின்சார வசதி கூட ஏற்படுத்த முடியவில்லையா என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இது தொடர்பான இணையத்தில் விவாதங்களும் ஏற்பட்டது.

திரௌபதி முர்முவின் சொந்த ஊர் குறித்து தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ்வும் விமர்சித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், " 22 வருட அரசியல் வாழ்க்கை,2 முறை எம்.எல்.ஏ, 1 முறை அமைச்சர், 1 முறை கவர்னர், இன்னும்...! ஆனால்,இவ்வளவு காலம் ஆட்சியில் இருந்தும் சொந்த கிராமத்திற்கு மின்சாரத்தை கொடுக்க முடியவில்லை.இதில் இவர்கள் பழங்குடி சமூகத்திற்கு என்ன செய்யப் போகிறார்கள்?" என விமர்சித்துள்ளார்.

Also Read: இனி மாதவிடாய் எப்போது வரும் என்பதை அறியலாம்.. பெண்களுக்காக புதிய வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்!