India

4 ஆண்டு முடிந்ததும்.. அக்னிபாத் வீரர்களுக்கு செக்யூரிட்டி பணி: பா.ஜ.க தலைவரின் ஆணவ பேச்சு!

ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். முக்கியமாக வட மாநிலங்களில் தீவிரமாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலிஸார் தடியடி தாக்குதல் நடத்தியதால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் ரயில்களுக்குத் தீவைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. அதுமட்டுமல்லாது பீகாரில் இந்த திட்டத்தை ஆதரித்துப் பேசிய பா.ஜ.க தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களைச் சூறையாடித் தீ வைத்துள்ளனர்.

இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தில் சேரும் வீரர்களுக்கு ராணுவப் பணி முடிந்த பிறகு பா.ஜ.க அலுவலகத்தில் செக்யூரிட்டி வேலை கொடுக்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இளைஞர்கள் கொச்சைப்படுத்தி கேவலமாக பா.ஜ.க தலைவர்கள் பேசி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க தேசிய செயலாளராக இருப்பவர் கைலாஷ் விஜய்வர்கியா. இவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "ராணுவத்தில் ஒழுக்கம், உத்தரவுகளைக் கேட்டு நடப்பது முக்கியம்.

அக்னிபாத் திட்டத்தில் சேரும் இளைஞர்கள் 4 ஆண்டு முடிந்த பிறகு அவர்கள் கையில் ரூ.11 லட்சம் இருக்கும். அவர்களின் நெஞ்சில் அக்னி வீரர் பதக்கம் இருக்கும்.

ஒருவேலை பா.ஜ.க அலுவலகத்தில் நான் செக்யூரிட்டியை நியமிக்கிறேன் என்றால், அக்னிபாத் திட்டத்தில் பணியாற்றிய ராணுவ வீரர்களுக்கு நிச்சயம் வாய்ப்பு கொடுப்பேன்" என தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் ஒன்றிய அமைச்சர் கிஷண் ரெட்டி, அக்னிபாத் திட்டத்தில் பயிற்சி பெறும் வீரர்களுக்கு ஓட்டுநர், எலெகட்ரீசியன், முடி திருத்துதல், சலவை செய்தல் உள்ளிட்ட திறன் பயிற்சியும் வழங்கப்படும். 4 ஆண்டுகள் முடிந்து வெளியே செல்லும் போது இந்த திறன் பயிற்சிகள் அவர்களுக்கு உதவும் என தெரிவித்துள்ளார்.

தங்கள் உரிமைகளுக்காக போராடி வரும் இளைஞர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பா.ஜ.க தலைவர்கள் பேசி வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அக்னிபாத் போராட்டம்.. புல்டோசர் கொண்டு இடிக்கப் போகிறீர்களா? மோடியை விமர்சித்த ஓவைசி!