India

பரோட்டாவில் பாம்பு தோல்.. வீட்டிற்கு சென்று பார்சலை பிரித்த வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்புதான் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12ம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து தமிழ்நாட்டிலும் ஷவர்மா தயாரிக்கும் உணவகங்களில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்திக் கெட்டுப்போன இறைச்சிகளைப் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் உணவகம் ஒன்றில் பார்சல் வாங்கிய பரோட்டாவில் பாம்பு தோல் இருந்தது மீண்டும் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் பிரியா என்பவர் பார்சலில் பரோட்ட வாங்கி வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். பிறகு அதை பிரித்தபோது அதில் பாம்பு தோல் இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே இது குறித்து உணவு பாதுகாப்புத்துறைக்குப் புகைப்பட ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து அதிகாரிகள் பரோட்டா வாங்கிய உணவகத்தில் ஆய்வு செய்தனர்.

அப்போது உணவகத்தில் போதிய வெளிச்சம் இல்லாமல் உணவுகள் சமைக்கப்படுவது தெரியவந்தது. மேலும் சுகாதாரமற்ற நிலையில் உணவகம் இருந்துள்ளது. பிறகு இந்த உணவகத்திற்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். மேலும், பரோட்டா பார்சலில் பாம்பு தோல் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை செய்து வருவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read: ஷவர்மா சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவி பரிதாப பலி.. 17 பேருக்கு சிகிச்சை : கேரளாவை உலுக்கிய பகீர் சம்பவம்!