India

“இதுதான் தமிழ்நாடு”: இஸ்லாமியர்கள் நோன்பு திறக்க உணவு வழங்கும் இந்துக்கள்.. 40 ஆண்டுகளாக தொடரும் வழக்கம்!

இந்தியாவின் ஒரு பகுதியில் மதக் கலவரங்களும், மத நல்லிணக்கத்தைச் சிதைக்கும் வகையிலான வன்முறை நிகழ்வுகளும் நடந்து வரும் நிலையில், தமிழ்நாடு மத நல்லிணத்திற்கான எடுத்துக்காட்டாகவே திகழ்கிறது.

சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வாலாஜா பள்ளிவாசலில் நோன்பு திறக்க வரும் இஸ்லாமியர்களுக்கு 40 ஆண்டுகளாக இந்துக்கள் உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

ரம்ஜான் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் மாலை விநியோகிக்கப்படும் நோன்புக் கஞ்சியை அனைத்து மதத்தினரும் வாங்கி அருந்துவதை வழக்கம். பல்வேறு அரசியல் கட்சிகளும் மதநல்லிணக்க இஃப்தார் நோன்பு நிகழ்வுகளை நடத்துவதும் தொடர்ந்து வரும் வழக்கமாகும்.

மத வேறுபாடு கருதாமல், இஸ்லாமிய பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சிக்கு தேவையான பொருட்களை இந்துக்கள் வாங்கி அளிப்பதும், நோன்புக் கஞ்சி அருந்தி நல்லிணக்கத்தைப் பேணுவதும் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இருக்கும் வழக்கம்.

அந்தவகையில், சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பழம்பெருமை வாய்ந்த வாலாஜா பள்ளியில்சுமார் 40 ஆண்டுகளாக ரமலான் மாதத்தில் இஃப்தார் நோன்பு திறக்க வரும் இஸ்லாமியர்களுக்கு இந்துக்கள் உணவு மற்றும் பழங்களை வழங்கி வருகின்றனர்.

திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்கள், கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த இஃப்தார் நிகழ்வில் பங்கேற்று நோன்பு கஞ்சி குடித்து நோன்பு திறக்கின்றனர்.

இந்தியாவின் ஒரு பகுதியில் மதக் கலவரங்களும், மத நல்லிணக்கத்தைச் சிதைக்கும் வகையிலான வன்முறை நிகழ்வுகளும் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், தமிழ்நாடு மத நல்லிணத்திற்கான எடுத்துக்காட்டாகவே திகழ்வது பெருமைக்குரியதாகிறது.

Also Read: ‘இதுதான் தமிழ்நாடு’.. மூன்று மத முறைப்படி மூன்று முறை திருமணம்: மயிலை இளைஞர் அசத்தல் - குவியும் பாராட்டு!