India

ஐதராபாத் மெட்ரோ ஸ்டேஷனில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை.. பொதுவெளியில் நடந்த விபரீதம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் அருகே உள்ள ஸ்ரீராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷப்னம் என்ற 22 வயது இளம்பெண்.

இவர் தனது பெற்றோரிடம் தன்னுடைய காதலன் குறித்து தெரிவித்து கல்யாணத்துக்கு சம்மதம் வாங்க முயற்சித்திருக்கிறார். ஆனால் அவரது பெற்றோரோ முடியவே முடியாது என காதல் திருமணத்துக்கு தடா போட்டிருக்கிறார்கள்.

இதனால் மன விரக்தியில் இருந்த ஷப்னம், நேற்று (ஏப்.,05) மாலை 5.30 மணியளவில் எஸ்.ஆர்.நகர் காவல்நிலைய கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட இ.எஸ்.ஐ. மெட்ரோ ரயில் நிலைய மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்திருக்கிறார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த இளம்பெண் ஷப்னமை மீட்டு ஐதராபாத் காந்தி மருத்துவமனையில் அப்பகுதி மக்கள் அனுமதித்திருக்கிறார்.

ஆனால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த ஐதராபாத் போலிஸார் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காதல் திருமணத்துக்கு சம்மதிக்காததால் இந்த விபரீத முடிவை இளம்பெண் எடுத்தாக தெரிய வந்திருக்கிறது.

இருப்பினும் போலிஸார் மேற்கொண்டு விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறார்கள். பொதுவெளியில் பெண் ஒருவர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்ட நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: நோயாளியுடன் சென்ற தனியார் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்து நாசம்: ஓட்டுநரின் செயலால் உயிரிழப்பு தவிர்ப்பு!