India

பழிவாங்கும் படலத்தின் உச்சம்; மருத்துவர் மகனை கொன்ற கம்பவுன்டர்கள் - உ.பியில் பயங்கரம்!

தனது எட்டு வயது மகனை காணவில்லை எனக் கூறி உத்தர பிரதேசத்தில் புலந்ஷாஹர் காவல் நிலையத்தில் மருத்துவர் ஒருவர் நேற்று (ஜன.,30) புகார் அளித்திருந்தார்.

புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த போலிஸார் மருத்துவரிடத்தில் எதிரிகள், விரோதிகள் எவரும் இருக்கிறார்களா யார் மீதேனும் சந்தேகம் இருக்கிறதா என விசாரித்திருக்கிறார்கள்.

அப்போது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய கிளினிக்கில் பணியாற்றி வந்த நிஜாம் மற்றும் ஷாஹித் ஆகிய இரண்டு கம்பவுண்டர்கள் ஒழுங்காக பணியாற்றாத காரணத்தால் வேலையை விட்டு நீக்கினேன் எனக் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து அவர்களை இருவர் தொடர்பாக சாத்ரி போலிஸார் விசாரணையை முடுக்கிவிட்டனர். அவர்கள்தான் சிறுவனை கடத்தியிருக்கக் கூடும் என ஆதாரங்களை திரட்டியதோடு இருவரையும் கைது செய்திருக்கிறார்கள்.

அப்போது இருவரும் மருத்துவரின் மகனை கடத்தி கொன்றுவிட்டதாக போலிஸாரிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். இதனையடுத்து கொல்லப்பட்ட மருத்துவர் மகனின் சடலத்தை போலிஸார் கைப்பற்றி இருக்கிறார்கள்.