India

“எது எரிஞ்சா என்ன.. எங்களுக்கு சோறு முக்கியம்” : அசராமல் சாப்பிடும் உணவுப் பிரியர்கள்.. வைரலாகும் வீடியோ!

திருமண மண்டபத்தில் தீப்பற்றிய நிலையில், விருந்தினர்கள் அசராமல் உணவை உண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மஹாராஷ்டிர மாநிலம் தானே அருகே கடந்த நவம்பர் 28ஆம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் மணமக்களின் உறவினர்கள் உள்ளிட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

திருமண மண்டபத்தின் அருகே பந்தியில் சாப்பாடு பரிமாறப்பட்டு வந்தது. அப்போது மண்டபத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நிகழ்ச்சியின்போது பட்டாசு வெடித்ததன் மூலம் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மண்டபம் முழுவதும் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது.

தீ விபத்து ஏற்பட்டதும் பந்தியில் இருந்த அனைவரும் எழுந்து நின்று திகைத்தபடி பார்க்க, இரண்டு பேர் அலட்டிக்கொள்ளாமல் தீவிரமாக சாப்பாட்டை ருசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

தீப்பற்றி எரிவதை அவ்வப்போது திரும்பிப் பார்க்கும் அவர்கள், சாப்பாட்டிலேயே கவனத்துடன் இருந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த நான்கு தீயணைப்பு வண்டிகள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், 6 இருசக்கர வாகனங்கள், மண்டபத்தில் இருந்த சில இருக்கைகள் மற்றும் அலங்கார பொருட்கள் எரிந்து நாசமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: “அழுகிய நிலையில் 15 மாதங்களாக கிடந்த சடலம்” : ESI மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?