India

“ஒரு கையை இழந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கிய 3 கர்ப்பிணிகளை மீட்ட ஓட்டுநர்” : நெகிழ்ச்சி சம்பவம்!

உத்தர பிரதேச மாநிலம், குனியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுமன், ஷ்யாமா. கர்ப்பிணியான இவர்கள் இருவருக்கும் கடந்த 24ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மேலும் குனியா கிராமம் ராமங்கா ஆற்றின் கரையோரம் இருப்பதால் சமீபத்தில் பெய்த மழையால் வெள்ளத்தால் சூழப்பட்டிருந்தது.

இதனால், கர்ப்பிணிப் பெண்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனை அறிந்த அதே கிராமத்தைச் சேர்ந்த ராம் நரேஷ் என்பவர் இரண்டு பெண்களையும் டிராக்டர் வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையில் சேர்த்தார். விபத்து ஒன்றில் ராம் நரேஷ் ஒரு கையை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர், டிராக்டரில் கர்ப்பிணிப் பெண்களை வெள்ளம் சூழ்ந்த பகுதி வழியாக அழைத்துச் செல்லும் போது வாகனம் பாதிக்கு மேல் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இருந்தபோதும் ராம் நரேஷ் துணிச்சலுடன் அவர்களை பத்திரமாக அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தார்.

இதையடுத்து அடுத்தநாள் கோமதி என்ற பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இவரையும் ராம் நரேஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தார். தற்போது இந்த மூன்று பெண்களும் நல்ல முறையில் பிரசம் நடந்து ஆரோக்கியமாக இருப்பதாக மிர்சாபூர் சுகாதார மையத்தின் பொறுப்பாளர் மருத்துவர் ஆதேஷ் ரஸ்தோகி தெரிவித்துள்ளார்.

Also Read: “கோயிலுக்குள் நுழைந்த தலித் குடும்பத்தினர் மீது கொலைவெறித் தாக்குதல்” : பா.ஜ.க ஆளும் குஜராத்தில் அவலம்!