India

”தொழில் வளம் குறைந்ததற்கு ஒன்றிய அரசே காரணம்” -ரங்கசாமியின் பரபரப்பு குற்றச்சாட்டால் கூட்டணியில் சலசலப்பு

75-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தையொட்டி, புதுச்சேரி மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் 'வாணிஜ்ய உத்சவ்" என்ற பெயரில் ஏற்றுமதியாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சி, புதுச்சேரி பல்கலைக்கழக கலாச்சார மையத்தில் இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு மாநாடு மற்றும் கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் அரசு எடுத்து வரும் நடவடிக்கையின் காரணமாக கொரோனா தொற்று குறைந்து, தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன. இருந்தபோதிலும் கடந்த காலங்களில் ஒன்றிய அரசு சில சலுகைகளை கொடுக்காததால், புதுச்சேரியை விட்டு பல்வேறு தொழிற்சாலைகள் வெளியே சென்றுவிட்டன.

Also Read: நகையே இல்லாமல் வெறும் பையை வைத்து ரூ.2 கோடிக்கு கடன்... அ.தி.மு.க ஆட்சியில் மாபெரும் மோசடி!

குறிப்பாக சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக 750 ஏக்கர் நிலம் இருந்தாலும் ஒன்றிய அரசு அனுமதி தராததன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக வீணாகவே உள்ளது. வரும் காலங்களில் ஏற்றுமதியை 2 ஆயிரம் கோடியில் இருந்து 4 ஆயிரம் கோடியாக உயர்த்த வேண்டும். புதுச்சேரியில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. தொழில் தொடங்குவதற்கான அனுமதியை அதிகாரிகள் எளிய முறையில் வழங்க வேண்டும்.

அதிகாரிகள் முதலீட்டாளர்களை அலைக்கழிக்க கூடாது. தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு கொடுப்பதை எளிதாக்க வேண்டும். அதிகாரிகள் தொழிற்சாலைகளை தொடங்க எளிய முறையில் அனுமதியை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பொதுவெளியில் கூட்டணியில் இருக்கும் ஒன்றிய பாஜக அரசையே முதலமைச்சர் ரங்கசாமி சாடியுள்ளது புதுச்சேரி அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வில் நீடித்த இழுபறி காரணமாக ஏற்பட்ட அதிருப்தியாக கூட இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Also Read: உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளிலும் அநீதி; அதிமுக அரசால் 4 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட தமிழக மாணவர்கள்!