India

"இறுதிச் சடங்கு செய்ய காசு இல்லை.." : தாத்தாவின் சடலத்தை ஃபிரிட்ஜில் வைத்த பேரன் - தெலங்கானாவில் அவலம்!

தெலங்கானா மாநிலம், பரக்காலா பகுதியைச் சேர்ந்தவர் பாலய்யா. இவரது பேரன் நிகில். இவர்கள் இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

இந்நிலையில், பாலய்யா வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு இது பற்றி தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் பாலய்யா வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டிலிருந்த ஃபிரிட்ஜை போலிஸார் திறந்துபார்த்தபோது பாலய்யாவின் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து பேரன் நிகிலிடம் போலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பாலய்யா உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாகவும், இறுதிச் சடங்கு செய்யப் பணம் இல்லாததால் அவரது உடலை ஃபிரிட்ஜில் வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, போலிஸார் பாலய்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து பேரன் நிகிலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், ஓய்வு பெற்ற ஆசிரியரான பாலய்யா இறந்துவிட்டது தெரிந்தால் அவரது ஓய்வூதியத் தொகை நின்றுவிடும் என்பதற்காகப் பேரன் நிகில் இறந்ததை மறைத்தாரா என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: சொந்தமாக ஹெலிகாப்டர் தயாரித்து சுதந்திர தினத்தில் பறக்க விட முயன்ற வாலிபர்... விபத்தில் பலியான சோகம்!