India

Facebook-ல் பழகி பாலியல் குற்றவாளியை ‘பொறி’ வைத்துப் பிடித்த பெண் போலிஸ்.. குவியும் பாராட்டு!

டெல்லி போலிஸாருக்கு கடந்த ஜூலை 30ம் தேதி அரசு மருத்துவமனை ஒன்றிலிருந்து, சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது.

இதையடுத்து போலிஸார் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்படச் சிறுமியைச் சந்தித்து அவரின் பெற்றோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். பிறகு இதுகுறித்து முதலில் புகார் கொடுக்கப் பெற்றோர் தயங்கியுள்ளனர். பின்னர் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து துணை ஆய்வாளர் பிரியங்கா சைனி தலைமையில் விசாரணை துவங்கியது. சில மாதங்களுக்கு முன்பு வீட்டின் அருகே ஒரு நபர் சிறுமிக்கு அறிமுகமாகியது தெரியவந்தது.

அந்த நபரின் பெயரைக் கொண்டு, சமூகவலைத்தளங்களில் 100 பேரின் புகைப்படங்களை முகநூலில் தேடி எடுத்து, சிறுமியிடம் காண்பித்துள்ளார் துணை ஆய்வாளர் பிரியங்கா சைனி. அப்போது சிறுமி குற்றவாளியை அடையாளம் காட்டியுள்ளார்.

இதையடுத்து, போலியாக முகநூல் கணக்கு ஒன்றை தொடங்கி, அந்த நபரிடம் நட்பாக பழகி வந்துள்ளார் பிரியங்கா சைனி. பின்னர் அவரிடம் நேரில் சந்தித்துப் பேச விரும்புவதாக பிரியங்கா தெரிவித்துள்ளார்.

இதன்படி ஜூலை 31-ம்தேதி இரவு 7.30 மணிக்கு தஷ்ரத்புரி மெட்ரோ ரயில் நிலையத்தில் சந்திக்கலாமா என கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் ஒப்புக் கொண்டுள்ளார். அப்போது அங்கு மாற்று உடையில் போலிஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

பின்னர், அந்த நபர், துவாரகா செக்டார்-1 பகுதிக்கு வருமாறு பிரியங்காவிடம் கூறியுள்ளார். இதையடுத்துயடுத்த சில நிமிடங்களில், ஸ்ரீமாதா மந்திர் மஹாவீர் என்கிளேவுக்கு வருமாறு பிரியங்காவிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அவரும் அங்கு சென்றார். அப்போது அங்கு வந்த அந்த நபரை மாற்று உடையில் இருந்த போலிஸார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்தவர் துவாரகா பகுதியில் உள்ள வளையல் கடையில் வேலை செய்பவர் என போலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த 15 மாதங்களில் ஆறு சிறுமிகளிடமும் பழகிவந்தது தெரியவந்துள்ளது.

போலியான பெயரைப் பயன்படுத்தி, சிறுமிகளிடம் பழகி, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு மீண்டும் அவர்களுடன் பழகுவதைத் தவிர்த்துவந்துள்ளார். இப்படிச் செய்தால் போலிஸிடம் சிக்காமல் இருக்கலாம் என விசாரணையின் போது அவர் தெரிவித்துள்ளார். மேலும் குற்றவாளியை பிடித்த பெண் போலிஸாருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Also Read: தன் காதலுக்கு போட்டியாக இருந்த நண்பனை வெட்டிக் கொன்ற சிறுவன் : திட்டம் போட்டுக் கொலை செய்தது அம்பலம்!