India
“விவசாயிகள் அல்ல குண்டர்கள்” : கடும் எதிர்ப்பால் 'மன்னிப்பு' கேட்ட ஒன்றிய பா.ஜ.க அமைச்சர்!
ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்த விவசாயிகள் விரோத வேளாண் சட்டத்தை எதிர்த்து 250 நாட்களுக்கு மேலாக டெல்லி எல்லையில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் அறிவித்தனர். இதன்படி நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது போலிஸாருக்கும், விவசாயிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து ஒன்றிய இணையமைச்சர் மீனாட்சி லேகி, “டெல்லியில் போராடும் அவர்கள் விவசாயிகள் அல்ல, அவர்கள் குண்டர்கள். அவர்கள் செய்பவை குற்றச் செயல்கள். ஜனவரி 26 அன்று நடந்ததும் வெட்கக்கேடான குற்றவாளிகளின் நடவடிக்கைகள். ஆனால், எதிர்க்கட்சிகளோ இதுபோன்ற விவசாயிகளின் போராட்டத்தை ஊக்குவிக்கின்றன” எனக் கருத்து தெரிவித்தார்.
இதையடுத்து "ஒன்றிய இணையமைச்சர் இந்தியாவின் 80 கோடி விவசாயிகளையும் அவமானப்படுத்தியுள்ளார். நாங்கள் கொடூரர்களாக இருந்தால், மீனாட்சி லேகி விவசாய நிலங்களில் தயாராகும் உணவைச் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்" என விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து தன் கருத்திலிருந்து ஒன்றிய இணையமைச்சர் மீனாட்சி லேகி பின்வாங்கியுள்ளார். "நான் குண்டர்கள் எனக் கூறியது விவசாயிகளை அல்ல. யாரையாவது காயப்படுத்தியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டு எனது வார்த்தைகளைத் திரும்பப் பெறுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”