India

“செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு... நாளை முதல் விண்ணப்பம்” : ஒன்றிய அரசு அறிவிப்பு!

செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என ஒன்றிய கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

மே மாதத்தில் தேசிய தேர்வு முகமை நடத்திவரும் இந்தத் தேர்வு, கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் நீட் தேர்வையும் ரத்து செய்யவேண்டும் என தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்தின.

ஆனால், மாநில அரசுகள் மற்றும் மாணவர்களின் கோரிக்கைகளுக்கு எதிராக நீட் தேர்வை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி நீட் தேர்வு நடத்தப்படும் என்றும், சமூக இடைவெளியை உறுதி செய்வதற்காக, தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கை 155ல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களை நாளை மாலை 5 மணிமுதல் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

Also Read: “காவிரி தமிழ்நாட்டின் வாழ்வுரிமை; மேகதாது அணையை எந்தச் சூழலிலும் அனுமதிக்க மாட்டோம்": முதலமைச்சர் பேச்சு!