India

“உயிருடன் விளையாடுகிறீர்களா?” - பழுதான வெண்டிலேட்டர்கள் வழக்கில் மோடி அரசுக்கு மும்பை நீதிமன்றம் கேள்வி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதிலிருந்து மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறை இப்போது வரை நீடித்து வருகிறது. மாநிலங்களில் வெண்டிலேட்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, மத்திய அரசு பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து வெண்டிலேட்டர்கள் அனுப்பிவைத்தது.

இப்படி அனுப்பி வைக்கப்பட்ட வெண்டிலேட்டர்கள் பல செயல்படாமல் பழுதடைந்துள்ளதாக பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் குற்றம்சாட்டியிருந்தன. மேலும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூட, 'செயல்படாத வெண்டிலேட்டர்களும் பிரதமர் மோடியும் ஒன்று' என விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம், மராத்வாடாவுக்கு பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்த அனுப்பப்பட்ட 150 வென்டிலேட்டர்களில் 113 வென்டிலேட்டர்கள் செயல்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பின்னர் இதுதொடர்பாக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஆர். காலே மற்றும் பி.யு.தேபத்வார் ஆகியோர் அடங்கிய அமர்வு, "வென்டிலேட்டர் குறைபாடு உள்ளதா இல்லையா என்பதை தீர்மானிக்க மருத்துவமனைகளின் டீன்கள் திறமையானவர்கள். அவர்களின் கருத்தை ஏற்க வேண்டும்.

இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது. வெண்டிலேட்டர்கள் உயிர்காக்கும் சாதனங்களாகும். அவை சரியாக வேலை செய்யாவிட்டால் நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். உயிருடன் விளையாடுகிறீர்களா? தரமற்ற வென்டிலேட்டர் வழங்கிய நிறுவனத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருக்கிறீர்கள் என்பதையும் மத்திய அரசு விளக்க வேண்டும்" என தெரிவித்துள்ளது.

Also Read: “கொரோனாவால் பெற்றோர், உற்றாரை இழந்து தவிக்கும் 577 குழந்தைகள்” - அதிர்ச்சி தகவல் வெளியிட்ட மத்திய அரசு!