India

“காப்பாற்றவும் வக்கில்லை.. எரிக்கவும் வழியில்லை”- கொரோனாவால் பலியானவரின் சடலத்தைக் கடித்துக் குதறிய நாய்!

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 4 லட்சத்தைக் கடந்துள்ளது. நாள்தோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்து வருகின்றனர்.

பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவமனை படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஆகிய காரணங்களால் உயிரிழப்பு வெகுவாக அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களைக் கூட சரிவர கையாள முடியாமல் திணறி வருகிறது உத்தர பிரதேச மாநில பா.ஜ.க அரசு. பலி எண்ணிக்கை அதிகரிப்பால் சுடுகாடுகளில் சடலங்கள் வரிசையில் காத்திருக்க வைக்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடல் தகனத்துக்காக வரிசையில் வைக்கப்பட்டிருந்தபோது நாய் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஜியாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் ஆடர்லியாகப் பணியாற்றிய 51 வயது நிரம்பிய ஒருவர், கடந்த வியாழக்கிழமை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசப் பிரச்சினை இருந்ததையடுத்து, சனிக்கிழமை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.

அடுத்த நாள் காலை வரை ஆம்புலன்ஸ் கிடைக்காமல் தவித்து, பின்னர் ஆம்புலன்ஸில் சடலத்தை ஏற்றி ஹிண்டன் பகுதிக்கு தகனம் செய்வதற்காக அவரது உறவினர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

அங்கு ஏராளமான சடலங்கள் வரிசையில் காத்திருந்ததால் பிளாட்ஃபார்மில் உடலை வைத்துவிட்டு, வெயில் கடுமையாக இருந்ததால் நிழலில் ஒதுங்கி நின்றுள்ளனர். அப்போது, சடலத்தை நாய் ஒன்று கடித்துக் குதறி முகத்தைச் சிதைத்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அதிகாரிகள் வந்து, தெருநாய்கள் வராத வகையில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.

கொரோனா நோயாளிகளைக் காப்பாற்ற இயலாத அரசால், சடலங்களைக் கூட மரியாதைக்குரிய வகையில் அடக்கம் செய்ய வசதி செய்யாதது கடும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

Also Read: படுக்கை இல்லாமல் 3 மணி நேரம் காத்திருப்பு... காரிலேயே உயிரிழந்த கொரோனா நோயாளி... உ.பியில் தொடரும் அவலம்!