India

"அரசு கொடுத்த ஆக்சிஜன் ஒன்றரை மணி நேரத்திற்கே வரும்” - அபயக்குரல் எழுப்பும் டெல்லி மருத்துவமனைகள்!

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் தலைநகர் டெல்லியில் நேற்றும் இன்றும் 45 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 219 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

இதேபோல, டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அடுத்த சில மணி நேரத்திற்கு மட்டுமே ஆக்சிஜன் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்லி பத்ரா மருத்துவமனையில் 500 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் ஒன்றரை மணி நேரத்திற்கே வரும் எனவும், ஆக்சிஜன் அளித்து நோயாளிகளைக் காப்பாற்ற உதவும்படியும் மருத்துவமனை நிர்வாகம் அபயக்குரல் எழுப்பியுள்ளது.

அங்கு கொரோனா தொற்றால் சிகிச்சைபெற்று வரும் 260 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவை உள்ளது. இதனால், இம்மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.எஸ்.சி.எல்.குப்தா டெல்லி அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து டெல்லி அரசு 500 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இன்று காலை அனுப்பியது. இது ஒன்றரை மணி நேரத்திற்கே வரும் எனவும், மேலும் அனுப்பி காப்பாற்றும்படியும் அவர் அபயக்குரல் எழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு பற்றாக்குறை இல்லை என்றே தொடர்ந்து கூறிவருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஆக்சிஜன் தட்டுப்பாடு: மக்களை இப்படி தினமும் பலியாக அனுமதிக்க முடியுமா - டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!