India

“கைவிடப்பட்ட கொரோனா நோயாளிகளின் உடலை தகனம் செய்யும் இஸ்லாமிய சகோதர்கள்” : மரிக்காத மனிதநேயம்!

தெலங்கானா மாநிலம் கமரெட்டி மாவட்டம் கட்டோபல்லியைச் சேர்ந்தவர் மொகுலாயா. இவர் அப்பகுதியில் சிறுதொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் மொகுலாயாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நோய்த்தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார் மொகுலாயா. சிகிச்சை பெற்று வந்த மொகுலாயாவுகு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் கூட சிகிச்சை பலனின்றி மொகுலாயா பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து பன்சுவாடா அரசு மருத்துவமனை நிர்வாகம் மொகுலாயா இறப்பு குறித்து அவரின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால், கொரோனா அச்சம் காரணமாக மொகுலாயாவின் உடலை அவரது குடும்பத்தினர் வாங்க மறுத்துள்ளனர்.

குடும்பத்தினர் உடலை வாங்காததால், கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் இடத்தில் மருத்துவமனை ஊழியர்கள் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்த நோயாளிகளை கொண்டுசெல்லும் பணியில் இருந்த இஸ்லாமிய இளைஞர்கள் மொகுலாயாவின் உடலை அடக்கம் செய்ய முன்வந்தனர்.

அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அனுமதியோடு இஸ்லாமிய இளைஞர்களான ஷபி மற்றும் அலி என்ற சகோதரர்கள் மொகுலாயாவின் சடலத்தை மீட்டு, அருகில் உள்ள இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று, இந்து முறைப்படி அனைத்து சடங்குகளையும் செய்து, அவரது உடலை தகனம் செய்துள்ளனர்.

இந்நிலையில், மொகுலாயாவின் உடலை தகனம் செய்தற்கு அவரது குடும்பத்தினர் உட்பட பலரும் ஷபி மற்றும் அலிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கொரோனாவால் இறந்து கைவிடப்பட்ட உடல்களை மனிதநேயத்துடன் இஸ்லாமிய சகோதர்கள் தகனம் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.

Also Read: கைவிட்ட மோடி அரசு... காரை விற்று கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கி வரும் இளைஞர்! #Viral