India

“கொரோனாவா... உள்ளேயே கிடங்க” - வீட்டைப் பூட்டிய பக்கத்து வீட்டுக்காரர் : ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

ஆந்திர மாநிலம் நெல்லூரில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டுக்குள் வைத்து சக குடியிருப்புவாசிகள் பூட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்த இருவர் 10 நாட்களுக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்துகொண்டதில், கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதால் இருவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், அந்த வீட்டிலிருந்த அவர்களது மகன், கடந்த திங்கட்கிழமையன்று வெளியே சென்று பெற்றோருக்குத் தேவையான மருந்துகளை வாங்கி வந்துள்ளார். இதனையறிந்த அண்டைவீட்டுக்காரர்கள் மூவரையும் வீட்டுக்குள் வைத்து பூட்டியுள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கல் கதவைத் திறக்கும்படியும், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று அவர்கள் கெஞ்சியும் யாரும் திறக்க முன்வரவில்லை எனத் தெரிகிறது.

இதையடுத்து, போலிஸாரை போனில் அழைத்து நிலைமையை விளக்கியதையடுத்து போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து பூட்டை அகற்றியதோடு, குடியிருப்புவாசிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டை சட்டவிரோதமாக பூட்டியதற்காக எதிர் பிளாட் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: “கொரோனா தடுப்பூசிகள் இனி கார்ப்பரேட் கையில்” : 1000 ரூபாய்க்கு விற்கப்படும் விபரீதம்!