India

“எங்கள் இஷ்டம்.. ஏர் இந்தியாவை விற்போம், இல்ல மூடுவோம்” - மத்திய பாஜக அமைச்சரின் ஆணவப் பேச்சு!

மத்தியில் ஆட்சி செய்துவரும் பா.ஜ.க அரசு பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியாருக்கு விற்பனை செய்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டம் அடைந்து வருவதால் தான் தனியாருக்கு விற்கிறோம் என்றும் பா.ஜ.க அரசு பேசிவருகிறது.

இந்நிலையில், மத்திய அரசுக்குச் சொந்தமான விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியா நீண்ட காலமாகவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. 66 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் இருப்பதால், ஏர் இந்தியாவால் தொடர்ந்து இயங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே ஏர் இந்தியாவின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்து நிதி திரட்டும் முயற்சியில் பா.ஜ.க அரசு ஈடுபட்டுள்ளது. முதலில் ஏர் இந்தியாவின் 76 சதவீதப் பங்குகள் மட்டும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் யாரும் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க முன்வரவில்லை. இதனைத் தொடர்ந்து முழு பங்கையும் விற்கப்போவதாக பா.ஜ.க அரசு அறிவித்தது.

இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை விற்போம் அல்லது நிறுவனத்தை இழுத்து மூடுவோம் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விற்க அரசு முடிவு செய்துள்ளது. தற்போதைய பிரச்சனை பொதுத்துறை பங்குகளை விற்பதா? இல்லையா? என்பதல்ல. பங்குகளை விற்பதா? அல்லது நிறுவனத்தை மூடுவதா? என்பதாகும்" என தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமலும், நிதி நெருக்கடி பிரச்சனையைச் சமாளிப்பதற்கான வழியைத் தேடாமல், எங்கள் இஷ்டத்திற்குத் தான் நாங்கள் இருப்போம், யாரும் எதுவும் கேட்கேக் கூடாது என்பது போல் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின் பேச்சு இருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: “வாக்கு சேகரிக்கவே வங்கதேச பயண நாடகம்” - மோடி விசாவை ரத்து செய்யக் கோரும் மம்தா பானர்ஜி!