India

“மோடி படங்களை உடனே நீக்க வேண்டும்” : 5 மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு !

மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியைக் கடந்த 26ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். இதையடுத்து இந்த ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி, அரசியல் கட்சி தலைவர்களின் படங்களும், சுவரில் வரையப்பட்டுள்ள கட்சிகளின் விளம்பரங்களும் அழிக்கப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு விளக்கும் விதமாக பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்து, பிரதமர் மோடி படத்துடன், மத்திய அரசு திட்டங்களை விளக்கும் விதமாக பெட்ரோல் பங்குகளில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் இன்னும் அகற்றாமல் இருப்பது, தேர்தல் விதிமுறை மீறலாகும். எனவே உடனடியாக மோடி படத்துடன் உள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனையடுத்து, பெட்ரோல் பங்குகளில் இருக்கும், மோடியின் படங்கள் அடங்கிய பேனர்களை, 72 மணிநேரத்தில் நீக்க வேண்டும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் ஏஜென்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்கள் நீக்குவதற்கான நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

Also Read: நீலகிரியில் கால்நடை துறை பேரில் வாக்குக்காக கோழி, ஆடுகளை வழங்கும் அதிமுக: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்