India

“சாதிகளை ஒழிக்க காதல் திருமணங்களே தீர்வு”: Dr.அம்பேத்கர் வரியை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்ற நீதிபதிகள்!

பெங்களூருவைச் சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி மாணவி டெல்லியில் பிரபல பல்கலைகத்தில் எம்.டெக் முடித்த துணை பேராசிரியரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதை விசாரித்த காவல்துறை அதிகாரிகள், காதலித்தவரை விட்டுவிட்டு, பெற்றோருடன் செல்லுமாறு அந்த பெண்ணிடம் அறிவுரை வழங்கினர்.

ஆனால், இதற்கு அந்தப் பெண் பெற்றோருடன் செல்ல மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து, அந்த தம்பதியினர் தங்களின் குடும்பத்திடமிருந்து எங்களைப் பாதுகாக்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “சாதி மறுப்பு திருமணம் செய்யும் இளைய தலைமுறையினர், பெற்றோரிடமும், தங்கள் குடும்பத்திடமும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். இவர்களின் உதவிக்கு நீதிமன்றங்கள் இருக்கின்றன. சில குடும்பங்கள் தங்கள் குழந்தைகளையும், வாழ்க்கைத் துணையையும் அந்நியப்படுத்தச் சாதி மற்றும் சமூகத்தைப் பயன்படுத்தும் நடைமுறையைக் கைவிட வேண்டும்.

சாதி மறுப்பு திருமணம் செய்யும் இளைஞர்கள், இந்தியாவில் சாதி மற்றும் சமூக பதற்றங்களைக் குறைக்கும் வழியைக் காட்டுகிறார்கள். சாதியை நிர்மூலமாக்க உண்மையான தீர்வு திருமணங்களே ஆகும்” என “ரத்தத்தில் தனது உறவினர் என்ற பந்தம் ஏற்படும்போதுதான், உறவினர் என்ற உணர்வை உருவாக்க முடியும்” என்ற சட்டமேதை அம்பேத்கரின் வரிகளை மேற்கோள் காட்டி நீதிபதிகள் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

மேலும், இதுபோன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை எவ்வாறு கையாள்வது என்று சில வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சித் திட்டங்களை வகுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். நீதிபதிகளின் இந்த தீர்ப்பு சாதி ஆணவப்படுகொலை செய்பவர்களுக்கும், சாதி - மத மோதல்களை ஏற்படுத்துபவர்களுக்கு இது சம்மட்டி அடியாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: “எனக்கு நன்றி சொல்லும் எத்தனை பேரை கைது செய்வீர்கள்?”: விவசாய சங்க தலைவர் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!