India

ஜனவரி 29ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரை துவக்க திட்டம் - பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை வரும் 29-ம் தேதி தொடங்கலாம் என்றும் பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யலாம் என்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. குளிர்காலக் கூட்டத்தொடரை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரோடு சேர்த்து நடத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு எம்.பி.க்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்தது.

எதிர்க்கட்சிகளின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் கொரோனா தொற்றுக்கு மத்தியில் கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரை மத்திய பா.ஜ.க அரசு நடத்தியதால் எம்.பி.க்கள், நாடாளுமன்ற ஊழியர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டனர். இதனால் கூட்டத்தொடர் முன்னதாகவே நிறைவடைந்தது.

இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்துவது குறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை இன்று கூடியது. இந்தக் கூட்டம் அளித்த பரிந்துரையின்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை வரும் ஜனவரி 29-ம் தேதி கூட்டி, வரும் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டது.

பிப்ரவரி 1-ம் தேதி பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்யலாம். முதல்கட்டக் கூட்டத்தொடர் ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ம் தேதி வரை நடத்தலாம். 2-வது கட்டக் கூட்டத்தொடர் மார்ச் 8-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. தினமும் 4 மணி நேரம் மட்டுமே கூட்டத்தொடரை நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Also Read: பறவைக் காய்ச்சல் அச்சுறுத்தல்: எல்லையோர மாவட்டங்களில் பலத்த சோதனை- மனிதர்களுக்கு தொற்றலாம் என எச்சரிக்கை!