India

பாஜகவின் பொய் செய்திகளுக்கு பதிலடி கொடுக்க சமூக வலைதளங்களிலும் களமிறங்கிய விவசாயிகள்!

டெல்லியில் கடும் குளிர் நீடிப்பதுடன் இரண்டு நாட்களாக மழை பெய்கிறது. இந்த இன்னல்களுக்கு இடையிலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 39வது நாளாக போராட்டத்தை தீவிரமாகத் தொடர்ந்து வருகிறார்கள்.

நாளை ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதில் முடிவு எட்டப்படாவிட்டால் 6 ஆம் தேதிமுதல் போராட்டம் தீவிரமடையும் என்று எச்சரித்துள்ளனர். குடியரசு தினத்தன்று டெல்லி வீதிகளில் டிராக்டர் அணிவகுப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

இதனிடையே சமூக ஊடகங்களிலும் தங்களுடைய போராட்டத்தை விவசாயிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். முதலில் சமூக ஊடங்களில் பாஜக ஆதரவு பொய் செய்திகளுக்கு பதிலடி கொடுப்பதற்காகவே சில பக்கங்களை விவசாயிகள் தரப்பில் தொடங்கினர்.

டிசம்பர் 14ஆம் தேதி சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், யூ டியூப் உள்ளிட்ட தளங்களில் கணக்குகளைத் தொடங்கி தங்கள் பதிவுகளை தீவிரமாக பதியத் தொடங்கினர்.

இதற்கு உலக அளவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. விவசாயிகளின் போராட்டங்கள் தொடர்பான யூட்யூப் பக்கத்தை 12 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். ஃபேஸ்புக் பக்கத்தை 3 லட்சத்து 12 ஆயிரம் பேரும் பின்தொடர்கிறார்கள்.

இந்த சமூக ஊடகங்கள் மூலம் விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராக பரப்பப்படும் பொய் செய்திகளுக்கு பதிலடி கொடுப்பதோடு போராட்ட செய்திகளையும் உடனுக்குடன் பதிவிட்டு வருகிறார்கள்.

Also Read: “என் உடலுறுப்புகளை விற்று மின் கட்டணம் செலுத்திடுங்கள்” - மோடிக்கு கடிதம் எழுதி வைத்து விவசாயி தற்கொலை!