India
மீண்டும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் - விவசாய சங்கங்கள் அறிவிப்பு!
பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 37 ஆவது நாளாகத் தொடர்கிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியின் எல்லைகளில் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை நடைபெற்ற ஆறு கட்டப் பேச்சுவார்த்தைகளில் போராட்டம் முடிவிற்கு வரவில்லை. இந்நிலையில், மத்திய அரசிற்கு கூடுதலான அழுத்தம் அளிக்கும் வகையில் போராடும் விவசாயிகள் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.
மத்திய அரசுடனான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை ஜனவரி 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் போராடும் விவசாய சங்கங்களின் 41 தலைவர்கள் மீண்டும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் ஒரு விவசாயி இன்று உயிரிழந்தார். 57 வயதான கல்தான் சிங் எனும் விவசாயி காஜிப்பூர் போராட்டக்களத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழு சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய பிரதிநிதிகள், முக்கிய கோரிக்கையான 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறவேண்டும் என்பது தொடர்பாக திங்கட்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படாவிட்டால் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.
30 ஆம் தேதி நடைபெற்ற ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையின்போது 5% கோரிக்கைகள் குறித்து மட்டுமே மத்திய அரசு பேச்சு நடத்தி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் 50% கோரிக்கைக்கு தீர்வு கண்டிருப்பதாக அரசு தெரிவிப்பது மிகப்பெரிய பொய் என்றும் அவர்கள் கூறினர்.
முக்கிய கோரிக்கையான மூன்று சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளுக்கு தீர்வுகாண வேண்டும். இல்லாவிட்டால் ஆறாம் தேதி டெல்லி, ஹரியானா மாநிலங்களில் டிராக்டர் பேரணி நடத்தப்படும்.
அதன்பிறகு வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகளை முடக்கும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலையை இழந்தால் ஆண்டுக்கு 3 லட்சம் விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப் படுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“ஒரு மாவட்டத்தில் மட்டும்.. 18 நாட்களில்.. 17 போக்சோ வழக்குகள்” - அதிரவைக்கும் தகவல்களின் முழு விவரம்!
-
“FIFA WorldCup.. ‘கால்பந்து குழந்தை இயேசு’ ரசிகர்களின் அளவிலா அன்பு” - சுவாரசிய சம்பவத்தின் பிண்ணனி!”
-
“கம்பீர் தேவையில்லை.. இந்திய அணிக்கு தோனியை கொண்டு வாருங்கள்… முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து!”
-
இட்டுன்னு போயி இட்டுன்னு வருவதுதான் அமைச்சரின் வேலை என நினைக்கிறாரா? : தி.மு.க ஐடி விங் கேள்வி!
-
“அனைத்து சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து மேகதாது அணை முயற்சியைத் தடுப்போம்!” : உதயநிதி!