India

“ஹரியானா முதலமைச்சருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டி போராட்டம்” : மோடி அரசை கதிகலங்க வைத்த விவசாயிகள்!

மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 28 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், 5ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததுள்ளது.

இதனால் தேசிய உழவர் தினமான இன்று டெல்லியில் விவசாயிகள் மதிய உணவை கைவிட்டு போராட்டம் நடத்துகின்றனர். மூன்றாம் நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டமும் இன்று தொடர்கிறது.

இதனிடையே ஹரியானா மாநிலத்தில் பா.ஜ.க முதலமைச்சருக்கு எதிராக விவசாயிகள் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர். அம்பாலாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்தபோது அவருக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டது.

மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர். இதனால் பரபரப்பு நிலவியது. பின்னர் முதலமைச்சரை போலிஸார் திருப்பி வேறு பாதையில் அழைத்துச் சென்றனர். ஹரியானா விவசாயிகள் 26,27,28 தேதிகளில் அனைத்து சுங்கச்சாவடிகளையும் முடக்கி வரி வசூலிப்பதை முடக்குவதாகக் கூறியுள்ளனர்.

Also Read: “தேசிய உழவர் தினமான இன்று மதிய உணவை கைவிட்டு டெல்லி விவசாயிகள் போராட்டம்”: 28 நாட்களாக தொடரும் போராட்டம்!