India

டிசம்பர் 3ல் மீண்டும் பேச்சுவார்த்தை: கோரிக்கையை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் திட்டவட்டம்!

பா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் ஆறாவது நாளாக போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்களிலும், விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

டெல்லிக்குள் கடந்த நவம்பர் 27-ம் தேதி நுழைய முயன்ற விவசாயிகள் மீது போலிஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஆனால், விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் இருந்ததால் போலிஸாரின் முயற்சி பலனளிக்கவில்லை.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு அரசு அனுமதி மறுத்ததால், டெல்லி புறநகர் பகுதியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத மத்திய அரசு, இன்று சமரச பேச்சுவார்த்தைக்கு சில விவசாய அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்ததையடுத்து இன்று மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தலைமையில் இப்பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

மேலும், வெகுசில விவசாய அமைப்புகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசு ஆகியோருக்கு இடையேயான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 3-ம் தேதி நடைபெறும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விவசாய சட்டங்களை திரும்பப் பெற்றே ஆகவேண்டும் என்றும், அதுவரை போராட்டம் தொடரும் எனவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

Also Read: “ஆணவத்தின் நாற்காலியில் இருந்து இறங்கி வாருங்கள்; விவசாயிகள் குறித்து சிந்தியுங்கள்” - ராகுல் காட்டம்!