India

மசூதியை சூறையாடிய பா.ஜ.க-வினர் : பீகாரில் வன்முறை வெறியாட்டத்தை துவங்கிய இந்துத்வா கும்பல்!

பீகார் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் பா.ஜ.க கூட்டணி பெரும்பான்மை இடத்தைக் கைப்பற்றி ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளது. பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெண்கள், தலித் மற்றும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்ல்லாத சூழல் ஏற்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், பீகாரில் வெற்றி பெற்ற பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்வா கும்பல் தனது வெறுப்பு பிரச்சாரத்தையும் வன்முறை வெறியாட்டத்தையும் தற்போதிருந்தே தொடங்கியுள்ளது. பீகாரின் ஜாமுவா கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட பா.ஜ.க ஆதரவாளர்கள் தேர்தல் வெற்றியைக் கொண்டாட ஊர்வலமாகச் சென்றுள்ளனர்.

அப்போது அங்குள்ள மசூதியில் தொழுகை நடந்து கொண்டிருந்தபோது பா.ஜ.கவினர் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டபடி சென்றுள்ளனர். மேலும் கூட்டத்தில் இருந்த பலரும் திடீரென கற்களை மசூதியை நோக்கி வீசத் தொடங்கியுள்ளனர்.

அப்போது அருகில் இருந்த இஸ்லாமியர்கள் அதனை தடுக்க முயலவே அவர்களை தள்ளிவிட்டு மசூதிக்குள் நுழைந்த பா.ஜ.கவினர் கதவு, சன்னல் மற்றும் மைக்கை உடைத்துள்ளனர். போலிஸாருக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக டாக்கா காவல் நிலைய அதிகாரி அபய் குமார் கூறுகையில், “பா.ஜ.க ஆதரவாளர்கள் நடத்திய ஊர்வலத்தால்தான் இந்த மசூதி சூறையாடப்பட்டுள்ளது. தொழுகை நடப்பதால் முழக்கம் எழுப்ப வேண்டாம் என கடைக்காரர் ஒருவர் கூறியதால் ஆத்திரத்தில் மசூதியின் மீது கற்களை வீசத் தொடங்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இரண்டு பேரை கைது செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கும் கிராமத்திற்கும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலிஸார் செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கற்பிக்க நிபந்தனை விதிப்பதா?: பாஜக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!