India

“கொரோனா பாதிப்பு குறைவதாக கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைவிடக் கூடாது” - மத்திய அரசு எச்சரிக்கை!

மத்திய சுகாதாரத்துறை செயலர், ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் உள்ளிட்ட கொரோனா தடுப்புக் குழுவினர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சக செயலர் ராஜேஷ் பூஷன் பேசுகையில், “இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோரின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவது நல்ல அறிகுறி.

குணமடைந்தவர்களின் விகிதம் 90.62 சதவீதமாக அதிகரித்துள்ளது. தற்போது சிசிச்சை பெற்று வருபவர்களில் 78% பேர், 10 மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ளவர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் பேசுகையில், “இன்றைய தேதியில் உலகில் எங்கும் கொரோனா தடுப்பூசி இல்லை. ஆய்வுகள் வெற்றிபெற்று தடுப்பூசி தயாராகும்போதுதான் அதன் தயாரிப்பு, கொள்முதல் போன்ற திட்டங்களை வகுப்பது இறுதியாகும். அதுவரை மாநில அரசுகள் பொறுத்திருக்க வேண்டும்.

தடுப்பூசி பயன்பாடு, விநியோகம் தொடர்பாக ஒரு தேசிய அணுகுமுறை திட்டம் உருவாக்கப்படும். அதனை மாநிலங்களும் பின்பற்றுவதுதான் சரியான செயல்முறையாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா பாதிப்பு குறைவதாகக் கருதி யாரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைவிட்டுவிடக் கூடாது. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் அடுத்த கட்ட பரவல் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்று வி.கே.பால் எச்சரித்தார்.

ஐ.சி.எம்.ஆர் நிர்வாக இயக்குநர் பல்ராம் பார்கவா பேசுகையில், “கொரோனா தடுப்பூசிகளை பரிசோதிப்பதில் 3 நிறுவனங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளன. கோவாக்சின் தடுப்பூசியை 3-வது கட்ட பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேடிலா தடுப்பூசி 2-ம் கட்ட சோதனைக்கு முன்னேறியுள்ளது. சீரம் தடுப்பூசி 2பி சோதனையை எட்டியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 79.09 லட்சமாக உயர்வு - நேற்று ஒரே நாளில் 45,148 பேர் பாதிப்பு ! #COVID19