India

மருத்துவப்படிப்பில் OBC-க்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு : இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்ச நீதிமன்றம்!

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீத ஓ.பி.சி இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.

ஓ.பி.சி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த இடஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே (2020) அமல்படுத்த உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மருத்துவப் படிப்பில் நடப்பாண்டில் ஓ.பி.சி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியுமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி, அக்.,16க்குள் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம்

இந்த வழக்கில் மத்திய அரசு அக்டோபர் 15ம் தேதி தாக்கல் செய்த பதில் மனுவில், இந்த ஆண்டுக்கு எந்த இட ஒதுக்கீடும் வழங்கமுடியாது என்று மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் தரப்பில் நடப்பாண்டுக்கு ஏற்கனவே உள்ளது போன்று 27 சதவீதத்தையாவது வழங்கவேண்டும் என்று வாதிட்டனர்.

மாணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் இந்த ஆண்டு முன்பு இருந்தபடி 27 சதவீதத்தை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 50% வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவில் சுகாதாரத்துறை அதிகாரிகள் இல்லை. ஆகவே அந்த குழுவானது முழுமையான குழுவாக இல்லை என்கிற வாதத்தையும் முன்வைத்தார்.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது. தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது. இந்த தீர்ப்பு தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “மருத்துவ இடங்களில் OBC இட ஒதுக்கீடு வழங்க ஒப்புதல்” - தி.மு.க தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு!