India

கொரோனா : ஜனவரி 11ம் தேதியே எச்சரித்த WHO - மோடி அரசின் அலட்சியம் ஆர்.டி.ஐ மூலம் அம்பலம்!

கொரோனா வைரஸ் எனும் ஒற்றை பெருந்தொற்று உலகம் முழுவதும் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக ஆட்டிப்படைத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் உலக பொருளாதாரம் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

இதுவரையில் இந்த வைரஸ் தொற்றால் 4 கோடியே 25 லட்சத்து 48 ஆயிரத்து 30 பேர் பாதிக்கப்பட்டதில் 11 லட்சத்து 50 ஆயிரத்து 14 பேர் பலியாகியிருக்கிறார்கள். இன்னும் பல லட்சக்கணக்கானோர் கொரோனா தொற்றில் இருந்து மீளாமல் இருக்கின்றனர்.

உலகில் அதிக பாதிப்புகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்த நிலையில், இந்தியாவுக்கு கொரோனா குறித்த எச்சரிக்கையை உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது தொடர்பான விவரம் தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு தேசிய நோய்க்கட்டுப்பாட்டு மையம் பதிலளித்துள்ளதன் மூலம் தெரியவந்துள்ளது.

அதாவது 2019ம் ஆண்டு டிசம்பர் 12-29ம் தேதி சமயத்தில் கொரோனா வைரஸ் சீனாவின் வூஹானில் வெகு தீவிரமாக பரவி வந்தது. அதன் பிறகு உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய மண்டல இயக்குநரான பூனம் கேத்ரபால் சிங் என்பவர் இந்தியாவின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு ஜனவரி 11ம் தேதியே கொரோனா குறித்து மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

அதில், சீனாவுடனான பயண மற்றும் வாணிப வர்த்தகங்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்தும், 59 பேர் இதுவரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் ஒருவர் உயிரிழந்ததோடு 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் எஞ்சியோர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்தியாவின் முதல் கொரோனா தொற்று பாதிப்பு ஜனவர் 30ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது முதல் இதுவரை 78 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 1.17 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையை போர்க்கால அடிப்படையில் மத்திய பா.ஜ.க அரசு செயல்படுத்தி இருந்தால் லட்சக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களை காவு கொடுக்கும் அளவுக்கு நிலை ஏற்பட்டிருக்காது என பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: இந்தியாவில் நாள்தோறும் உச்சம் தொடும் கொரோனா பரவல் : நேற்று ஒரே நாளில் 53,370 பேர் பாதிப்பு ! #COVID19