India

பா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாற்று மசோதாக்கள் : பஞ்சாப் காங். அரசு அதிரடி!

பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை நாடு முழுவதுமுள்ள விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் புதிய சட்டங்களை நிறைவேற்றுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டார்.

அதன் அடிப்படையில், பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் அரசு வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 3 வேளாண் மசோதாக்களை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

அதன் மீது பேசிய முதல்வர் அமரீந்தர் சிங், “வேளாண் சட்ட விவகாரத்தில் மத்திய அரசு நடந்து கொள்வது விசித்திரமாக உள்ளது. இப்போது கொண்டுவரப்படும் 3 மசோதாக்களும் பஞ்சாப் அரசு மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தொடுக்கும் சட்டப்போராட்டத்தின் அடிப்படையை வழங்கும்” எனத் தெரிவித்தார்.

பஞ்சாப் அரசு கொண்டுவந்துள்ள சட்ட வரைவில், “மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களும் முன்மொழியப்பட்ட மின்சார திருத்தச் சட்ட மசோதாவும் நிலமற்ற கூலிகளுக்கும், விவசாயிகளுக்கும் எதிரானது.

பசுமைப் புரட்சிக்குப் பிறகு பஞ்சாப் மட்டுமல்லாது உ.பி, ஹரியாணா ஆகியவற்றிலும் நீண்டகாலமாக வேளாண் பொருட்கள் விற்பனை அமைப்பு முறை நன்றாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசு விவசாயச் சட்டங்களை இயற்றவில்லை மாறாக வாணிபச் சட்டங்களைத்தான் இயற்றியுள்ளது.

வேளாண்மை என்பது மாநிலங்களுக்குரியது. இந்தச் சட்டங்கள் மாநில உரிமைகள் மீது ஆக்கிரமிப்பு செலுத்தி அனைத்தையும் பறிப்பதாகும். அரசியல் சாசன சட்டத்துக்கு விரோதமானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: மோடி அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு : பஞ்சாப் மாநில பா.ஜ.க-வின் பொதுச் செயலாளர் பதவி விலகல் !