India

IPL போட்டியை வைத்து 730 கோடிக்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது : ஐதராபாத் சைபர் கிரைம் போலிஸ் அதிரடி!

ஐ.பி.எல் கிரிக்கெட் 2020 தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐ.பி.எல் போட்டி தொடங்கிய முதல் நாளில் இருந்தே ஐதராபாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பெரிய அளவில் சூதாட்டம் நடைபெறுவதாக சைபர் கிரைம் போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, ஐதராபாத் சைபர் கிரைம் போலிஸாருக்கு, பத்திராபாத்தில் ஐ.பி.எல் போட்டியை வைத்து சூதாட்டம் நடத்துவதற்காக பிரத்யேகமான செல்போன் செயலி ஒன்றை பயன்படுத்தியது தெரிவந்தது.

இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட முக்கிய புள்ளிகள் பற்றி விசாரணை நடத்தி, அந்த கும்பலின் தலைவனாகச் செயல்பட்ட சந்தூர் சுஷாந்த் என்பவரை போலிஸார் கைது செய்தனர். சந்தூர் சுஷாந்த் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து 7 பேரை சைபர் கிரைம் போலிஸார் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து 22,89,500 ரூபாய் பணமும், 8 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் சந்தூர் சுஷாந்த் உள்ளிட்ட 8 பேரையும் போலிஸார் விசாரித்ததில், கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து இந்த கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

அதன்மூலம் தற்போது வரை 730 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளனர். மேலும் இவர்கள் பயப்படுத்திய வந்த வங்கி கணக்கையும் தற்போது போலிஸார் முடக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 8 பேர் தலைமறைவு ஆன நிலையில், அவர்களை போலிஸார் தேடி வருகின்றனர்.

ஐ.பி.எல் போட்டிகளை வைத்து மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க மத்திய மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: சொந்த வாகனத்தை தானே எரித்து தீவிரவாதிகள் சதி என நாடகம் : ‘இந்து அதிரடிப்படை’ நிர்வாகி கைது!